கேள்வி - உயிர்களனைத்தும் இறைவனின் சொரூபமே என்று சொல்கிறீர்கள். உயிர்கள் பிறவி எடுத்தது இறைவனை அடையவே என்றும் சொல்கிறீர்கள். இறைவனாகிய உயிர்கள் ஏன் பிறவி எடுக்க வேண்டும் ?
இராம் மனோகர் - சிருஷ்டி எதனால் நடந்தது என்று யாரும் துள்ளியமாக விளக்கி விட முடியாது. ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு நடந்து விட்டது. அதற்குப் பிறகு சிருஷ்டியும் ஒடுக்கமும் இந்தப் பிரபஞ்சத்தில் இடை விடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி சிருஷ்டியின் நிமித்தம் பரமாத்மாவிடமிருந்து புறப்பட்ட ஜீவன்கள் அனைத்தும் மீண்டும் பரமாத்மாவை நோக்கிப் பயணிக்கின்றன. இதற்கிடையே பல பிறவிகள் எடுக்கின்றன என்பது கோட்பாடு. இறைவனை இறைவன் என்று சொல்வதும், ஜீவாத்மனை ஜீவாத்மா என்று சொல்வதும்தான் சாஸ்திரப் பிரமாணம். ஆனாலும், ஜீவாத்மனாக தன்னை வெளிப்படுத்தி இருப்பது இறைவனே என்பதை உணர்த்துவதற்காகவும், மனதில் பேதமற்ற நிலையினை உருவாக்கிடவும், பக்தியை பெருக்குவதற்காகவும், அன்புணர்வை ஓங்கிடச் செய்வதற்காகவும் ஜீவன்களை பரமாத்ம சொரூபம் என்று சொல்லுகின்றார்கள். மல உபாதிகளாலும், வினைத் தொடர்ச்சியினாலும், பாசபந்தங்களினாலும் தன் உண்மை நிலையை, யதார்த்த சொரூபத்தை உணராமல் கிடந்துழலும் ஜீவாத்மனுக்கு தன்னுணர்வை ஏற்படுத்துவதற்காக நீயும் பரமாத்மாவே என்று சொல்கிறார்கள்.
இறைவன் என்ற சொல் முற்றிலும் பரம்பொருளுக்கே உரியது. ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, பலம், வீரியம், தேஜஸ் என்கிற ஆறுவித தெய்வீக இயல்புகள் நிரம்பப் பெற்றவர் இறைவன். ஜீவர்களிடத்து இந்த ஆறு தெய்வீக இயல்புகளையும் ஒருங்கே காண்பது என்பது இயலாத காரியம். இந்த ஆறு சிறப்பியல்புகளும் பரம்பொருளாகிய இறைவனுக்கே உரியனவாகின்றன. ஆயினும் ஜீவர்கள் பரிபக்குவமடைந்து வரும் அளவு இந்த தெய்வீக இயல்புகள் அவர்களிடத்து ஓங்கி வருகின்றன. ஜீவபோதம் இருக்கும் வரையில் பிறவிகள் தொடர்வதைத் தவிர்க்க இயலாது. ஜீவபோதம் அழிந்து பட்டவிடத்து இந்த ஆறு தெய்வீக இயல்புகளையும் ஒருங்கே அடையப் பெற்றவன் தானே இறைவனாகி விடுகிறான். அதற்குப் பிறகு பிறவிகள் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
கேள்வி - முன்பின் தெரியாதவர்களிடமிருந்தோ அல்லது மிகவும் நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்தோ கூட எதிர்பாராத நிலையில் துன்பம் வருகிறது. ஒரு சுனாமி வருகிறது அதில் இலட்சக் கணக்கானவர்கள் மாண்டு போகிறார்கள். ஒரு போர் வருகிறது அதில் இலட்சக் கணக்கான பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என அனைவரும் மாண்டு போகிறார்கள். அந்தக் குழந்தைகள் யாருக்கும் தீங்கு செய்திருக்க வாய்ப்பேயில்லையே ? இதை ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் சொல்கிறீர்கள் நம் அனுமதியின்றி யாரும், எதுவும் நமக்குத் துன்பம் தர முடியாது என்று! அதனால்தான் கேட்கிறேன்.
இராம் மனோகர் - இந்து மதம் இதெல்லாம் ஊழ் வினைப் பயன் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடும். ஆனால், மறுபிறவி நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என்ன பதில் சொல்வது ? எனினும் பாருங்கள் எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறது. முந்தைய பிறவி என்பதை நீங்கள் மரபு வழியாகத் தொடரும் கர்ம வினை என்றும் கொள்ளலாம். விஞ்ஞானம் ஜீன் என்கிறது. நாம் செய்கின்ற, பார்க்கின்ற, பேசுகின்ற, எண்ணுகின்ற அனைத்துமே நம் ஒவ்வொரு அணுக்களிலும் பதிவாகி விடுகின்றது என்பதை விஞ்ஞானமும் கூட ஏற்றுக் கொள்கிறது.
என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக விலங்கினப் பதிவுகள் கூட நம் அணுக்களின் கருமையத்தில் உள்ளன என்கிறார். அதற்கான தெளிவான விஞ்ஞான விளக்கங்களையும் தருகிறார். ஏழு தலைமுறைகளாக கர்ம வினைகள் தொடரும் என்றும் சில இந்து மத புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது நீங்கள்தான் பாவம் செய்திருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் முன்னோர்கள் செய்த பாவங்கள் கூட வினைப் பதிவகளாக உங்கள் மரபு அணுகளின் வழியாகத் தொடர்ந்து வரும்தானே ?
அத்தகைய தீவினைப் பதிவுகளில் இருந்து உருவாகும் எண்ணங்கள் துன்பத்திற்கே வழி வகுக்கும் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. சுனாமி வந்த பொழுது எல்லோரும் மாண்டு போகவில்லையே ? தப்பிப் பிழைத்தவர்களும் இலட்சக் கணக்கானோர் உண்டு அல்லவா ?! ஆக வினையின் பயன் யாருக்கு எப்படி அமைய வேண்டுமோ அப்படித்தான் அமைகின்றது என்பது தெளிவு. மேலும் நாம் வாழும் இந்த வாழ்க்கை என்பது சார்பு வாழ்க்கை. ஒரு சமுதாயமாக, குழுவாக சேர்ந்து வாழும் பொழுது, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தனி ஒரு மனிதனின் தவறு கூட மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும்.
உதாரணமாக காடுகள், மலைகளாக இருந்த நம் பூமியில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் மலைகளையெல்லாம் உடைத்து, கோவில்களைக் கட்டினார்கள். மரங்களை வெட்டி கதவுகள், ஜன்னல்கள், வீடுகள், பாலங்கள், கட்டில்கள், இருக்கைகள், தீ மூட்ட விறகுகள் என்று பல விதங்களில் பயன்படுத்தினார்கள். காடுகளை அழித்து நகரங்களை நிர்மாணம் செய்தார்கள். வன விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தீர்த்தார்கள். என்னவாயிற்று ? அதன் தொடர்ச்சியாக இன்று வரையிலும் மலைகள் அழிந்தன, காடுகள் அழிந்தன, வன விலங்குகள் அழிந்தன. இயற்கையின் சுழற்சியே மாறி விட்டது.
இதன் விளைவுகளால்தானே மழையின்மை, பூமி வெப்பமடைதல், நில நடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகள் எல்லாம் ஏற்படுகின்றன. எனவே இது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் தவறேயாகும். நாம் தவறே செய்யவில்லையென்றாலும், நமக்கும் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். போர் என்பது தலைவனின் குற்றம். நாம் யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அவன் எண்ணப்படியே போர் உருவாகிறது. தலைவனின் தவறு தொண்டர்களை பாதிக்கும். மன்னனின் தவறு மக்களை பாதிக்கும். எல்லாமே செயல் விளைவுதான்.
யோசித்துப் பார்த்தால் பின்புலம் புரியும். அதோடு கூட மற்றொரு நிலையும் உண்டு. அது என்னவென்றால் இயற்கை தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்ளும் நிலையில் அது நல்லவன், கெட்டவன், சிறியவன், பெரியவன், மனிதன், விலங்கு என்றெல்லாம் பார்ப்பதில்லை. மொத்தமாக அடித்துத் துவம்சம் செய்து விட்டுப் போய்க் கொண்டேயிருக்கும். நாம் எறும்புப் பொடி போடும் பொழுது எத்தனை எறும்பு சாகும் என்று நமக்குத் தெரியுமா ? எனவே இயற்கையை நாம் குற்றம் சொல்வதற்கில்லை. ஏனெனில் நாமும் அந்த இயற்கையின் ஒரு அம்சம்தான். பூமியின் சீரான இயக்கத்தை, உயிர் சுழற்சியை நிலை நிறுத்திக் கொள்ள இத்தகைய மறு சுழற்சிகள் அவ்வப்போது பேரிடராக நடந்து விடுவதும் உண்டு.
எனவே நாம் நல்லவர்களாக, நல்ல எண்ணங்கள் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்பது மட்டுமே அறம். ஏனெனில் எப்பொழுது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எது நடந்தாலும், நடக்கா விட்டாலும் நாம் நல்லவர்களாக இருந்தால் எந்த விதமானத் துன்பமும் நம்மை அணுகாது என்பது நிதர்சனமான உண்மை. நமக்குத் துன்பம் தரக் கூடிய சக்தி யாரிடத்திலும், எதனிடத்திலும் இல்லை. எல்லாமே நம் வினைப் பயனை நாம் நுகர்வதற்குத் துணைக் கருவிகளாக அமைந்திருக்கின்றன அவ்வளவுதான். பொதுவாக நான் சொல்வது ஒன்றுதான். அதாவது...
'' ஆத்மந ; ப்ரதி கூலாநிபரேஷாம் நஸமாசரேத்.''
எந்த செயல் நமக்குப் பிடிக்கவில்லையோ, துன்பம் தரக் கூடியதாக உள்ளதோ அதைப் பிறருக்குச் செய்யாதே என்பதுதான். யாரும் என் மனதை நோகடிக்கக் கூடாது, தீய வார்த்தைகள் பேசக் கூடாது என்று நினைக்கிறாயா ? அப்படியானால் நீயும் அவற்றைப் பிறருக்குச் செய்யாதே. யாருடைய பொருளையும் அபகரிக்க நினைக்காதே. கலப்படம் செய்யாதே. பிறர் வீட்டுப் பெண்கள் மேல் தவறான எண்ணம் கூடக் கொள்ளாதே. அண்ணன், தம்பியை ஏமாற்றாதே. அவர்கள் சொத்தை அடைய நினைக்காதே. பிறருக்குச் செய்யும் செயல்களை நல்லதா, கெட்டதா என்று சிந்தித்து நல்லதைச் செய், கெட்டதை விடு. துன்பம் உன்னை விட்டு வெகு தூரம் ஒடி விடும். இது உனக்காக மட்டமல்ல. உன் சந்ததிக்காகவும் சொல்லப்பட்டது.
கேள்வி - \\ஜீவாத்மனாக தன்னை வெளிப்படுத்தி இருப்பது இறைவனே என்பதை உணர்த்துவதற்காகவும், மனதில் பேதமற்ற நிலையினை உருவாக்கிடவும், பக்தியை பெருக்குவதற்காகவும், அன்புணர்வை ஓங்கிடச் செய்வதற்காகவும் ஜீவன்களை பரமாத்ம சொரூபம் என்று சொல்லுகின்றார்கள்\\ என்று சொல்லி விட்டு நீங்களே ''தீயவர்களோடு இணங்காதே, நல்லவர்களோடு இணங்கு என்று பேதப்படுத்திக் கூறுவது சரிதானா ? தீயவர்களாக இருப்பதும் இறைவன்தானே ? இது பேதத்தை ஏற்படுத்தாதா ?
இராம் மனோகர் - பகவான் ஸ்ரீராம கிருஷ்ணரிடம் இந்தக் கேள்வியை ஒருவர் கேட்டார். அவர் ''புலியும் இறைவனின் சொரூபமே என்று சொல்லி அதன் முன்னால் போய் நிற்பாயா?'' என்று திருப்பிக் கேட்டார். கெட்டவர்களிடத்திலும் இறைவன் இருப்பது உண்மைதான் என்றாலும், அவர்கள் நல்லவர்கள் ஆகும் பொருட்டும், நாம் கெட்டவர்களாக ஆகி விடக் கூடாது என்பதற்காகவும் அவர்களை விட்டு விலகியே இருப்பது உத்தமம் என்று சொன்னார். நாமொன்றும் பெரிய ஞானிகளல்ல. நாம் சராசரி மனிதர்கள். நம்மிடையே குண தோசங்களின் அடிப்படையில் சிலர் நல்லவர்களாகவும், சிலர் தீயவர்களாகவும் தென்படுகின்றனர். ஏன் தென்படுகின்றனர் என்று சொல்கிறேன் என்றால், அந்தத் தீய இயல்பு படைத்தவனையும் நல்லவன் என்று சொல்லி, அவனோடு இணங்கி வாழக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கோணத்தில் அவன் நல்லவனாகவே தென்படுகிறான். நல்லது கெட்டது என்பது ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றது. எனினும் நம் சாஸ்திரங்கள் எது நல்லது, எது தீயது என்று வகுத்து வைத்திருக்கிறபடியான கோட்பாடுகளுக்கு முரண்படுகிறவர்கள் தீயவர்கள் என்று நல்லவர்களால் கருதப்படுகிறார்கள்.
விலங்களில் கூட துஷ்ட விலங்குகள், இஷ்ட விலங்குகள் உண்டு. துஷ்ட விலங்குகளை நாம் நெருங்குவதில்லை. இஷ்ட விலங்குகளோ நம் படுக்கை அறை வரையிலும் கூட வந்து உறவாடுகின்றன. அது போலவே நல்லவர்களிடத்து இணக்கம் கொள்வதும், தீயவர்களை விட்டு விலகியிருத்தலும் நமக்கு நன்மை பயக்கும் விஷயமே ஆகும். நாம் அந்த மனிதர்களை விட்டு விலகவோ, அவர்களைப் பேதப்படுத்தவோ விரும்பவில்லை. அவர்களது தீய இயல்புகளை விட்டு விலகி நிற்கிறோம் அவ்வளவுதான். நீர் மழையாகப் பொழியும் பொழுது அதில் நனைந்து விளையாடி மகிழ்கிறோம், அதே நீர் ஆற்றில் அமைதியாக ஓடும் பொழுது அதில் நீந்தி விளையாடிக் குளித்து மகிழ்கிறோம். ஆனால் அந்த நீர் வெள்ளமாக வடிவெடுத்து வரும் பொழுது, அதை விட்டு விலகி ஓடி விடுகிறோம். நாமக்கு நீரோடு எந்த பேதமுமில்லை. அதன் தன்மைகள் மாறும் பொழுது அதோடு இணங்குவதா அல்லது விலகுவதா என்கிற நிலைப்பாடு உருவாகி விடுகிறது. எனவே மனிதர்களோடு பேதம் கொள் என்று சொல்லப்படுவதில்லை. நல்லவனாக இரு. நல்லவனாக இருக்க வேண்டும் என்றால் நல்லவனோடு இணக்கம் கொள் என்றுதான் சொல்லப்படுகிறது. இது கெட்ட குணம் உள்ளவர்களுக்குதான் அதிக பயனை அளிக்கக் கூடிய உபதேசமாகும்.
ஆனால், இந்த நிலைப்பாடுகளெல்லாம் பக்குவப்படாத அல்லது பக்குவப்படுவதற்கு முயற்சிக்கின்ற சராசரி மனிதர்களாகிய நமக்குத்தான். ஞானிகள் நிலையோ வேறு. ஞானத்தை அடைந்தவர்கள் பார்வையில் இத்தகைய பேதங்கள் எதுவும் தென்படுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் பரம்பொருள் சொரூபமாகவே உணர்கிறார்கள். அதனால் அவர்கள் உயிர்கள் அனைத்திடமும் சமநோக்கம் கொண்டு இணக்கம் வைக்கிறார்கள். எங்கள் ஊருக்கருகில் சாது சிதம்பரம் சுவாமிகள் என்று ஒரு சித்த புருஷர் இருந்தார். அவர் சதுரகிரிக்குச் செல்லும் பொழுது காட்டையே அழித்து நாசம் செய்து கொண்டிருந்த மதம் கொண்ட யானையை தன் அன்பான, இணக்கமான பார்வையால் கட்டுப்படுத்தினார். வனத்துறை அந்த யானையை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுவாமிகள் ஸ்டே வாங்கி, அந்த உத்தரவை ரத்து செய்ய வைத்தார். இது 50 ஆண்டுகளுக்கு முன் சடந்த சம்பவம்தான்.
இதற்கு ஆதாரமாக அந்த யானையோடு சுவாமிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சதுரகிரி ராஜா மடத்தில் இருக்கிறது. பிறகு சில நாட்கள் கழிந்த நிலையில் தந்தத்திற்காக அந்த யானையை சில கயவர்கள் கொன்று விட்டார்கள். பிறகு அந்தத் தந்தம் மீட்கப்பட்டு நீண்ட நாட்களாக சுந்தர மகாலிங்கம் கோவிலில் லிங்கத்துக்கு அருகில் இருந்தது. பிறகு பாதுகாப்பு கருதி இப்பொழுது வேறு எங்கோ வைத்திருக்கிறார்கள். அந்த யானையுடைய மண்டை ஓடு இன்றும் சுவாமியின் சமாதிக்கு அருகில் அவர் உபயோகித்த பொருட்களை வைக்கும் அறையில் மாட்டி வைக்கப்பட்டு, அதற்கு அனையா தீபம் போடுகிறார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஞானிகள் முன்னால் நல்லவன் கெட்டவன் என்கிற நிலையெல்லாம் கிடையாது. அவர்கள் பார்வை பட்டால் புலியும் பசு போல அமைதியாக நிற்கிறது. மதம் கொண்ட யானை அடங்கி விடுகின்றது. ஆனால், இத்தகைய நிறைஞானம் வரும் வரையில் நாம் தீயவர்களை விட்டு விலகி இருப்பதுவும், நல்லவர்களோடு இணக்கம் வைப்பதுவும் அவசியமானதாகும்.
கேள்வி - கடவுளை வணங்க நெறிமுறைகள் உள்ளனவா? கட+உள்==உள்ளதை கடந்தவர் ஆகாயத்தையே உடல்லாக கொண்டவர். கடவுளை அன்புடனும் பக்தியுடனும்தானே வணங்க வேண்டும் !!?
இராம் மனோகர். அன்புடனும், பக்தியுடனும் வாழ்வதுதான் நெறி. உள்ளும் புறமும் நிறைந்து நிற்பவர் அவரே. எனினும் புற விஷயங்களில் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு பல தடைகள் உள்ளன. எனவே கண்களை மூடி மனதை உள்முகமாக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அந்த அடிப்படையில்கடந்து உள்ளே போனால் கடவுளைக் காணலாம் என்ற கோட்பாட்டின் படி கடவுள் என்று சொல்வதாகச் சொல்வார்கள். கடந்து உள்ளே போவது நாம்தானே எனும் போது அவரை ஏன் கட உள் என்று சொல்கிறார்கள் ? போகச் சொல்வது நம்மை, போவது நாம் ஆனால், அவரையல்லவா கட உள் என்று சொல்கிறார்கள் !! அது ஏனென்றால் இவையனைத்தையும் கடந்து நம் உடலுக்குள் உயிருக்குள் உயிராக அவர் இருக்கிறார் என்பதனால்தான் அவர் கடவுள். அதாவது அனைத்தையும் கடந்து உள்ளே இருப்பவர் கடவுள். அத்தகைய அதி சூக்குமமான கடவுள் நிலையை உணர்வதற்கு நெறி முறைகள் அவசியமானதாக இருக்கிறது. சாதாரணமாக நம் மனமானது ஸ்தூலப் பொருட்களையே பற்றித் தொடர்வதால் அதுவும் ஸ்தூல வடிவம் அல்லது ஜட நிலையைப் பெற்று விளங்குகிறது. ஆனால் உண்மையில் மனதின் இயல்பு சூக்குமமாகும். மனதைப் பொருத்த வரை அது எதை நினைக்கிறதோ அந்த வடிவத்தை எடுத்து விடுகிறது. அதன் குணத்தைப் பிரதிபலிக்கின்றது. எனவே அது ஜட நிலையில் உழல்கின்றது. அத்தகைய மனதை தன் இயல்பு நிலைக்கு அதாவது சூக்கும நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றால் எண்ணங்கள், புலன்கள், அந்தகரணங்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்குரிய முயற்சிகள் உள்ள வாழ்க்கை முறையையே நெறி முறை கொண்ட வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. அத்தகைய நெறி முறைகளில் அன்பும், பக்தியும் அடக்கம்.
கேள்வி - அய்யா ,தான் விதைத்த வினை பாவமாகவும், புண்யமாகவும் கர்மக் கணக்கிடப்பட்டு பிறகு அப்பிறவியிலோ அல்லது மற்ற பிறவியுலோ அதே ஆன்மாவின் முன் காரணப்பட்டு அனுபவமாக ஆக்கி உணருதலே வாழ்க்கையெனில், இதற்கும் மேலாக நம் முன்னோர் (பிறிதொரு ஆன்மா) செய்த வினைப்பயனின் ஒரு பகுதியை வம்சாவெளி ஆன்மாவின் முன் காரணப்படுத்தி அதை அனுபவிக்க வைப்பது எப்படி இந்த ஆன்மாவிற்கு உணர்வு பூர்வமான அனுபவமாக அமையும் ? சாட்சி பாவமான சொருபமுடைய முதல் ஆன்மாவின் வினைப்பயனை அதே ஆன்மாதானே அனுபவிக்கவேண்டும் ? ஆன்மா இரண்டல்ல ஒன்றே என்றோ எல்லா ஆன்மாவும் கடல், அலை, துளி போன்று ஒருமைப்பட்டதுஎன்றோ, மரபு அணு தொடர்புடையதே என்றோ இவ்விடத்தில்(முக்தி அடையும் முன்) வாதிப்பது ஏற்புடயதாகாது இல்லையா?
இராம் மனோகர் - உடலின் மூலமாகவே ஆன்மா தன் இலட்சியத்தை அடைய முடியும். எனவே இந்த உடல் யாரிடமிருந்து பெறப்பட்டதோ, அதற்குரிய மரபியல் வினைகளையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதாவது புல்லோ, பறவையோ, விலங்கோ, பாம்போ, மனிதனோ எந்த உடலை ஏற்றுக் கொள்கிறோமோ அவற்றிற்குரிய வினைகளும் அந்த வினைகளின் ஈடாகிய இயல்புகளும் தவிர்க்க முடியாததாகும். பொதுவாக இரு வினைகள் என்றால் நல்வினை, தீவினை என்பார்கள். ஆனால், இருவினை என்பது உடல் ரீதியான வினை, ஆன்மாவை பற்றி நிற்கும் வினை என்று இரண்டு நிலைகளைக் குறிப்பதாகும். பல பிறவிகளைக் கடந்து மனிதப் பிறவி அமைந்ததின் நோக்கம், இந்தப் பிறவியில் சாதனங்களின் மூலம் பற்றித் தொடரும் இந்த இரு வினைகளையும் கடக்க வேண்டும் என்பதற்காகவே. ஆன்மா வினைகளைப் பற்றுவதுமில்லை. எதையும் உணர்வதுமில்லை. அது வெறும் சாட்சியாக இருக்கிறது. என்றாலும், இந்த கன்மங்கள் நெல்லில் உமி போலவும், செம்பில் களிம்பு போலவும் ஆன்மாவை மறைத்து நிற்கின்றன என்பதை உணர்க. இத்தகைய மலக்கன்மங்கள் நீங்கிய விடத்து இரு வினைகளும் அற்றுப் போய் விடும். கடல், அலை என்பதெல்லாம் பரமான்மாவுக்கும், ஜீவான்மாவுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்ட உதாரணங்களாகும். ஆழ் கடலுக்கும், அலைகின்ற மேற்பரப்பாகிய கடலுக்கும் உள்ள வேறுபாடுதான், ஜீவான்மாவுக்கும், பரமான்மாவுக்குமானது.
முக்தி அடைவதற்கு முன் பரமான்மா, ஜீவான்மா என்று இரண்டு நிலைகள் இருந்தாலும், நாம் பரமான்மாவிலிருந்துதான் வந்தோம், நாம் வேறு பரமான்மா வேறு அல்ல. ஆனால், மலக் கன்மங்களால், பற்றுகளால் நாம் அதை உணராமல் இரண்டுபட்டு கிடக்கிறோம். இத்தடைகளையெல்லாம் நீக்கி, மலக்கன்மங்களை அகற்றி விட்டால் இரண்டும் ஒன்றுதான் என்றுதான் சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வது எதற்காகவென்றால், நம் இலட்சியத்தை துரிதப்படுத்துவதற்காகவே. மற்றொரு கோணத்திலும் இதை யோசிக்கலாம். அதாவது நடைமுறை கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது அவரவர் செய்த கர்மங்களை அவரவரே அனுபவிக்க வேண்டும் என்பதே சட்டம். கொள்ளைக் காரன் வால்மீகி தன் தாய், தகப்பன், மக்கள், உற்றார், உறவினர் அனைவரிடமும் இந்த கேள்வியைக் கேட்டான். நான் பாவம் செய்து கொண்டு வருகின்ற பொருட்களையெல்லாம் நீங்கள்தானே அனுபவிக்கிறீர்கள் ? எனும் பொழுது உங்களுக்கும் அந்தப் பாவத்தில் பங்கு உண்டல்லவா ? என்று கேட்டான். ஆனால், அனைவருமே ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். அவரவர் செய்த பாவ புண்ணியங்களை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்று. இது உலகாயத்தின் விதி. இன்று வரையிலும் இதுதான் நடைமுறை.
தந்தை திருடினால் மகனுக்கு தண்டனை வழங்க மாட்டார்கள். தந்தையைத்தான் தண்டிப்பார்கள். ஆன்ம ரீதியிலான வினைப்பயன் பற்றிய கோட்பாடும் இதுவே. ஒவ்வொரு ஜீவனும் தன் வினைப்பயனுக்குத் தானே பொறுப்பாளியாகிறான். அப்படியானால் ஒருவன் குற்றம் செய்க் காரணமாகத், தூண்டுதலாகப் பின்புலத்தில் இருப்பவர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லையா ? என்ற கேள்வி வருகிறது. அவர்களுக்கும் தண்டனை உண்டு. குற்றம் செய்யக் காரணமாக இருந்ததற்கான வினைப்பயனைஅவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால், குற்றத்திற்கான தண்டனை அதைச் செய்தவனுக்கு மட்டுமே. ஆனால் ஒவ்வொரு ஜீவனும் மற்றவர்களோடு தன்னை பந்தப்படுத்திக் கொள்கிற அளவு மற்றவர்களுடைய வினைப்பயனை தானும் ஏற்று அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
ஒரு நல்லவன் திருடனோடு பழகும் பொழுது அவனும் தண்டனைக்கு உள்ளாகி விடுகிறான். மரபு ரீதியாக பெற்றோருக்கு இருந்த வியாதி பிள்ளைகளுக்கும் வருகிறது இது இயற்கை. அதே சமயம் மகன் நோய்வாய்ப்பட்டவனாக இருக்கும் பொழுது அவனோடு நெருங்கிப் பழகும் பெற்றோரும் அந்த நோய்க்கு ஆளாகி விடுகிறார்கள். இது தன்னைப் பந்தப்படுத்திக் கொள்வதால் ஏற்படுவது. பந்தபாசத்தில் உற்றாருடைய வினையைத் தன் வினையாகக் கருதி அதன் பயனை அனுபவிப்பது உயிர்களின் இயல்பாக இருக்கிறது. ஆன்ம ரீதியிலான, மரபு ரீதியிலான என்று மட்டுமில்லை, பற்றுதல் உடையவர்களுக்கு விதவிதமான பாங்கில் வினைப்பயன் வந்தமைகிறது. பற்றற்றவர்களுக்கு அத்தகைய வினையின் தொடர்பு அற்றுப் போய் விடுகிறது. இத்தனை வினைகளும், பயன்களும் உடல், மனம், உயிர் இவற்றின் நுகர்ச்சிகளாகவும், அனுபவங்களாகவும் அமைகின்றனவேயல்லாமல் இவை ஆன்மாவை எந்த விதத்திலும் பந்தப்படுத்துவதில்லை.அது வெறும் சாட்சி பாவமாகவே இருக்கிறது.
கேள்வி - நீங்கள் வேறு பல தத்துவங்களைப் பற்றி கூறுகிறிர்கள். ஆன்ம தத்துவம், சிவ தத்துவம், மாயா தத்துவம் என்று பலப் பல புதுப் புது தத்துவங்களைப் பற்றி பேசுகிறிர்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் கூறும் இத்தனை வகையான தத்துவங்களால் வாழ்க்கை தத்துவத்திற்கு என்ன பயன் அல்லது இரண்டிற்கும் என்ன தொடர்பு ?
இராம் மனோகர் - தத்துவம் என்பது மாறாத உண்மை அவ்வளவுதான், வேறொன்றுமில்லை. நீங்கள் இப்படியே எதைக் குறித்தும் நுட்பமாக ஆராய்ந்து பார்க்கும் தன்மையற்ற ஒரு வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டீர்கள். எனவே உங்களுக்கு இது பிடிப்பதில்லை, வெறுப்பு ஏற்படுகிறது. உங்கள் உடலுக்குள்ளேயே என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.
உடலைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் ? அதுதான் மருத்துவர்கள் இருக்கிறார்களே ?
உடல் என்றால் உடனே வியாதி மட்டும்தானா ? இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உடலுக்குள் இருக்கின்றன. அண்டத்தில் உள்ள அனைத்தும் இந்த பிண்டத்திலும் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், அப்படி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா ? தெரியாது. அவைதான் நான் கூறும் தத்துவங்கள். தத் என்றால் அது. துவம் என்றால் தன்மை. அதாவது படைப்புக் காலம் தொட்டு ஊழிக்காலம் வரை தன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும் பொருள்களே தத்துவங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆன்ம தத்துவங்கள் 24ஐ எல்லா வைதிக சமயங்களும் ஏற்றுக் கொண்டாலும், சைவ சமயம் மேலும் நுணுக்கமான 12 தத்துவங்களைத் தருகிறது. அவை வித்தியா தத்துவங்கள் 7, சிவ தத்துவங்கள் 5 ம் ஆகும்.
இந்த மூன்று வகைத் தத்துவங்களுமே உயிரை உலக போகங்களில் அழுந்தும்படி செய்வனவாகும். உலக அனுபவங்களை, இயல்பை அறியாத ஒருவனுக்கு அவன் தோழர்கள் உடனிருந்து உலகியல் பிரவிருத்தியைர உண்டு பண்ணுவது போல , மூலமலமாகிய அறியாமையில் அழுந்தியுள்ள உயிர்களுக்கு உடனிருந்து அறிவு இச்சை முயற்சிகளை எழுப்பும் கருவிகள் வித்தியா தத்துவங்கள் எனப்பட்டன. அந்நிலையில் உலக நுகர்ச்சியை அனுபவிக்க சித்தமாக உள்ள நிலையில் உயிரானது புருடன் என்றழைக்கப்படும். அவ்வாறான உயிருக்கு உலக நுகர்ச்சியைத் தருத் தத்துவங்களே ஆன்ம தத்துவங்களாகும். அதற்கு முதற் காரணமாக அமைவது மூலப் பிரகிருதி ஆகும். இந்த மூலப் பிரகிருதியே உயிர்களை உலக போகங்களில் மயங்கிடத் தூண்டும். புருடன் என்ற நிலையில் உள்ள உயிர் மூலப்பிரகிருதியை அறிந்து, அழுந்தி, மயங்கி அதனால் விளையும் இன்பம், துன்பம், மயக்கம் என்கிற மூவகை வேதனைகளை மாறி மாறி அனுபவிக்கும். மூலப்பிரகிருதியே ஆன்ம தத்துவங்கள் வடிவில் உயிர்களைச் சார்ந்து செயலாற்றும். ப்ரம்மத்தின் திருவருளால் இவ்விருவகைத் தத்துவங்களையும் பற்றி இயக்குவதற்கு கருவிகளாக இடை நிற்பனவே சிவ தத்துவங்களாகும்.
நம் உடலில் நிகழும் நிகழ்வுகளை அறிவு என்றும், தொழில் என்றும் இரு பிரிவாகப் பிரிக்கலாம். இதில் அறிவானது கேட்பது, பார்ப்பது, சுவைப்பது, முகர்வது, ஸ்பரிசத்தால் உணர்வது என்ற ஐந்து வகைகளில் செயல் புரிகிறது. இந்த செயல்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐந்து உறுப்புகளின் மூலம் நிகழ்வதால் இவற்றை ஐம்பொறிகள், அறிவுப் பொறிகள், ஞானேந்திரியங்கள் என்றெல்லாம் அழைக்கிறோம். இது போல நம் உடலில் உள்ள தசை, நரம்பு, மூச்சுப்பை போன்றவற்றின் சுருங்குதல், விரிதல் பற்றி தோன்றும் நிகழ்வுகளை நம் முன்னோர்கள் ஐந்து வகைகளாகக் கூறியுள்ளனர். அவை, பேசுதல், போவது வருவது, கொடுப்பது பெறுவது, மல மூத்திர வியர்வையை வெளியேற்றுவது, கருவுறுவது அல்லது கோடல் என்பனவாம். இந்த தொழில்களுக்கு கருவிகளாக விளங்கும் உள்நாக்கு, கை, கால், பாயு, உபத்தம் என்கிற ஐந்தும் தொழிற் பொறிகள், கன்மேந்திரியங்கள் என்றும் வழங்கப்படுகின்றன.
இந்த அறிவுப்பொறிகளுக்கு எதிர் புலன்களாக உள்ள குணங்கள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து வகைகளில் நிகழ்கின்றன. இந்த குணங்களுக்கு பற்று கோடாக உள்ள பொருள்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற இயற்கையின் ஐந்து பிரிவுகளாக உள்ளதால் இவற்றை ஐம்பெரும் பூதங்கள் என்றழைப்பார்கள். இந்த பூதங்களின் சூக்கும நிலையையே தன்மாத்திரைகள் என்பார்கள். தன்மாத்திரை என்றால் சூக்கும பூதம் என்பதாம். ஆக நாலைந்து இருபது தத்துவங்களைப் புரிந்து கொண்டோம். இவற்றிற்கும் மேலாக இவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய அகக்கருவிகளையே அந்தக்கரணங்கள் என்பார்கள். பொதுவாக மனம், உள்ளம், நெஞ்சு என்றெல்லாம் சொல்வார்கள். மனம் என்று பொதுவாகச் சொன்னாலும் நம் முன்னோர்கள் தொழில் வேறுபாடு கருதி அந்தக்கரணங்களை நான்காகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார்கள். அவை மனம், புத்தி, அகஹ்காரம், சித்தம் என்பனவாகும். இவற்றின் சிறப்பியல்பென்ன வென்றால், புறக்கரணங்களாகிய அறிவுப் பொறிகள் நமக்கு நிகழ்கால உணர்வை மட்டுமே உணர்த்தும். ஆனால் அகக்கருவிகளாகிய அந்தக்கரணங்களே நமக்கு முக்கால உணர்வையும் உணர்த்தும்.
ஆக ஆத்ம தத்துவங்கள் இருபத்தி நான்கையும் பற்றி பார்த்தோம். இந்தத் தத்துவங்களே முக்குணங்களாக (சத்துவம், ராட்சதம், தாமசம்) ஏற்ற தாழ்வாகக் கலந்து விளங்கும் விளக்கங்களாகும். இந்த முக்குணங்கள் பிரிந்து நின்று விளங்கித் தோன்றாமல் நின்ற நிலைக்குப் பெயரே மூலப்பிரகிருதி. உயிரானது மூலப்பிரகிருதியைச் சார்வதால்தான் அது காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்கற்றங்களுக்கும் ஆட்படுகிறது. ஆணவ மலமாகிய மூலமலத்தில் அழுந்தி அறிவிழந்து நிற்கும் உயிர் மூலப்பிரகிருதி என்னும் காரிய மாயையில் பொருந்தி தன் அறிவிச்சை செயல்கள், உண்மை மாத்திரை விளங்கப்பெற்று , ஒன்றையும் குறிக்க மாட்டாது மயங்கி நிற்கும். இக்காரிய மாயையே ஆனந்தமய கோசம் எனப்படும்.
மாயையில் இருந்து காலம், நியதி, கலை என்ற தத்துவங்கள் தோன்றுகின்றன. அதற்குப் பிறகு கலையில் இருந்து வித்தையும், மூலப்பிரகிருதியும், அதில் வித்தையில் இருந்து அராகமும் தோன்றின. இதிலே கலையானது ஆணவத்தின் மறைப்பை சற்று களைந்து உயிரின் முயற்சியை எழுப்பும். அப்போது மூலப்பிரகிருதியானது உயிரை காரியமாகிய அந்தக் கரணங்களை பற்றும்படிச் செய்யும். அந்நிலையில் கலையின் விருத்தியாக வித்தை உயிரின் அறிவாற்றலை விளக்கும். அராகம் உயிரின் விழைவாற்றலை விளக்கும்.
இப்படி கலை, வித்தை, அராகம் எனும் தத்துவங்களால் உயிர் தன்செயல், அறிவு, இச்சை என்ற மூவகை ஆற்றலைப் பெற்று, உலகப் பொருள்களால் வரும் இன்ப துன்ப மயக்க நுகர்ச்சியைப் பெறும் தகுதியுடையதாக மாறி நிற்கும். இந்நிலையையே புருடன் என்பார்கள். புருடனானது இன்ப துன்ப மயக்கங்களை நுகரும் போகத்தை காலம் இவ்வளவு காலம் நுகர்க என்று வரையறை செய்யும். நியதியானது வினைகளுக்கீடாக இன்ன இன்னதை நுகர்க என்று நியமிக்கும். இவ்வாறாக உயிர்களுக்கு உடலில் இருந்து உதவும் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்களின் தொகுதியே விஞ்ஞான மயகோசம் எனப்படும்.
இதிலிருந்து தெரிந்து கொள்வதென்னவென்றால், உயிரைப் புருடத் தனமை அடையச் செய்வது வித்தியா தத்துவங்கள். அப்புருடனை போகத்தில் திளைக்கச் செய்து மயக்குவது மூலப்பிரகிருதியின் காரியமாகிய ஆன்ம தத்துவங்கள் என்பதுவாகும். இந்த முப்பத்தொரு தத்துவங்களை தொழிற்படுத்துவதும், சுத்த மாயையின் விருத்தியாய், ஆதியின் ஞானக் கிரியா சக்திகளின் நிலைக்களமாய் உள்ள தத்துவங்கள் ஐந்துமே சிவ தத்துவங்களாகும்.
மேலே கூறியுள்ள முப்பத்தொரு தத்துவங்களுள் (காரிய)மாயை உயிரின் காரணசரீரம் அல்லது ஆனந்த மயகோசம் எனப்படும்.
காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்ற ஐந்து தத்துவங்களின் தொகுதி கஞ்சுகசரீரம் அல்லது விஞ்ஞானமய கோசம் எனப்படும். கஞ்சுகம் என்றால் சட்டை. இவ்வைந்து தத்துவங்களும் உயிருக்குச் சட்டை போல் பொருந்தி இருப்பவை.
மூலப்பிரகிருதியின் முக்குணங்களும் விளங்கி நிற்கும் நிலையில் அந்நிலையை குணதத்துவம் என்பார்கள். சித்தம் என்ற அந்தக் கரணமாகச் சொல்வதும் இதையே. இதுவே குணசரீரம் மூன்று. ஆக இவ்வெட்டு தத்துவங்களின் தொகுதி சூக்குமங்களை அடக்கிக் கொண்டிருக்கும் மனோ மயகோசமாகும்.
காரணசரீரம், கஞ்சுகசரீரம், குணசரீரம் இம்மூன்றும் உயிர்களுக்கு மிக நெருங்கிய நிலையில் அதி நுட்பமாக அமைந்திருப்பதால் இம்மூன்றின் தொகுதியை பரசரீரம் என்பார்கள். இந்த பரசரீரத்திற்கு மேலே சூக்கும பூதம் எனப்படும் தன்மாத்திரைகள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் கூடி அகக்கரணசரீரம் எனப்படும். கனவு நிலையில் நமக்கு உணர்வைத் தருவது இச்சரீரமே. ஆயுள் முடியும் போது பருவுடலை நீங்கிய உயிர் பிறிதோர் உடலை எடுப்பதற்கும், ஒளி உலகு, இருள் உலகுக்குச் செல்ல பற்றுக்கேடாக உள்ளதும் இச்சரீரமேயாகும். இதையே பிராண மயகோசம் என்பார்கள். இது எட்டுத் தத்துவங்களால் அமைந்த காரணத்தால் புரியட்டகம் என்பார்கள். இதையே ஔவை ''புரியட்ட காயம் புலப்பட எனக்கு'' என்று பாடியிருப்பார்.
இந்தப் புரியட்ட காயத்தின் காரியமாய், ஐம்பூத பரிணாமம் எனப்படுவதாய், கண்ணுக்குப் புலப்ப்பட்டு, நனவு நிலையில் போக்கு வரவுக்கும், போக நுகர்ச்சிக்கும் பயன்படும் பருவுடலே தூலசரீரம் எனப்படும். இதையே அன்ன மயகோசம் என்பார்கள்.
உயிரானது அன்ன மயகோசத்தை பற்றி தொழிற்பட்டு வினைப்பயனை நுகரும் நிலையை நனவு என்கிறோம். ப்ராண மயகோசத்தை பற்றி தொழிற்பட்டு வினைப் பயனை நுகரும் நிலை கனவாகும். மனோமய கோசத்தில் உயிரானது ஒடுக்கமுறும் நிலையே
கனவற்ற உறக்கம் ஆகும். இம்மூன்றையும் கடந்து உயிரானது விஞ்ஞான மயகோசத்தைப் பற்றி அறிவு செயல்கள் எல்லாவற்றையும் விட்டு, உயிர்ப்பு மட்டும் உடையதாய் நிற்கும் நிலையே பேருறக்கம் அல்லது துரியம் எனப்படுகிறது. இவைகளையெல்லாம் கடந்து ஆனந்த மயகோசம் எனப்படும் காரிய மாயையின் செயல் மட்டும் நிகழப் பெறும் போது உயிரின் நிலை உயிர்ப்படக்கம் அல்லது துரியாதீதம் எனப்படுகிறது. உயிரானது இவ்வைந்து கோசங்களையும் பற்றி அவஸ்தைகளையும், உணர்வு வேறுபாடுகளையும் அடைவதால், இவ்வைந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உள்ள தன்னோக்கு உணர்வே ''ஆன்மா'' எனப்படுகிறது.
கேள்வி - முக்தி என்பதும் சொர்க்கம் என்பதும் ஒன்றுதானா ஐயா ?
இராம் மனோகர் - முக்தி என்பது நம் சொர்க்கமல்ல. அங்கே ரம்பா, ஊர்வசி, மேனகையையெல்லாம் பார்க்க முடியாது. அதையெல்லாம் விட சுகமானது, பேரின்ப மயமானது, ஆனந்தமானது என்பதை உணர்த்தவே அப்படியெல்லாம் சொல்லி வைத்தார்கள். ஆனால், அப்படிச் சொல்வதே கூட மனிதன் மனதில் மேலும் ஆசைகளை வளர்த்து விடும் என்பதை ஏனோ அவர்கள் உணராமல் போனார்கள் !!! ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நாம் அனைவரும் முக்தியை நோக்கிதான் போய்க் கொண்டு இருக்கிறோம். அதை அடைவதற்கான கால அளவை நீட்டிக் கொள்வதும், குறைத்துக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. சிலர் சொல்வார்கள் ''சித்தி அடைந்தவர்கள் தாம் விரும்பும் பொழுது முக்தியடையலாம் என்று.'' சித்தியடைதல் அவ்வளவு எளிதா என்ன ?
உலகாய ஆசைகளை, பந்தங்களை அறவே அறுத்தெறிந்தால் மட்டுமே சித்தியடைதல் சாத்தியமாகிறது. ஆசை வளர வளர அதுவே காமமாகிறது. ஆசை என்பது மனதளவில் இருக்கிறது. ஆனால், அதுவே காமம் என்ற நிலைக்கு உயரும் பொழுது, ஆசைப்பட்ட விஷயத்தை அடைய எத்தகைய பாதகச் செயலையும் செய்யத் தூண்டி விடுகின்றது. எனவே ஆசை வளர வளர வினைகளும் வளர்ந்து, பிறவிகளும் நீள்கின்றன. முக்தியடையாமல் இந்த பூமியில் சுகமாக வாழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று எண்ணுவது கூட ஒரு ஆசைதான். ஆனாலும், எவ்வளவுதான் ஆசை வயப்பட்டு பிறவியை நீட்டிக் கொண்டே போனாலும், ஒரு நாள் இல்லை ஒருநாள் ஜீவன் முக்தியை அடைந்தே தீரும் என்பதுதான் சத்தியம்.
கடலில் ஓயாது அலைகள் எழுந்து கொண்டே இருப்பது போல மனதிலும் ஆசைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அவைகளைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனை கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் போதாது. எனவேதான் ஆசையை பிரவிருத்தி என்பார்கள். ஆசைகளை கட்டுப்படுத்தி ஒடுக்குமளவு பிறவிகள் அறுபடுகின்றன. நிர் ஆசை கொண்ட மனதை உடையவனே பரம்பொருளோடு ஒன்றுபடத் தகுதி உடையவனாகிறான். நினைவு தெரிந்த நாட்கள் முதல் நாம் கொண்ட ஆசைகளையெல்லாம் பட்டியலிட்டுப் பார்த்தால் நம் மீதே நமக்கு வியப்பும், வெட்கமும் தோன்றும். அதற்குக் காரணம் என்னவென்றால் வாழக்கையின் ஒவ்வொரு படித்தரத்திலும், வயதிலும் ஒவ்வொரு வகையான ஆசைகள் முன்னிலை பெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயதில், பருவத்தில் பெருகுகிற ஆசை, அதற்குப் பின்னால் வரும் பருவங்களில் பொருளற்றதாகப் போய் விடுகிறது.
அனுபவமும், அனுபவத்தால் அறிவும் பெற்று மனம் தெளிவடைய அடைய ஆசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அறுபட்டுப் போய் விடுகின்றன. கடைசியில் ஆசைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு நிராசையில் நிலைத்திருப்பதே நம் வாழ்வின் குறிக்கோளாகும். பந்த பாசங்களும் அவ்வாறே. உயிர்கள் அனைத்துமே பந்த பாசத்தில் அழுந்திக் கிடக்கின்றன. ஆனால், நன்றாகக் கவனித்துப் பார்க்கும் பொழுது, பாசபந்தம் என்கிற உணர்வே இல்லையென்றால் இந்த பிரபஞ்ச வாழ்வே ஸ்தம்பித்து நின்று விடும். உலக வாழ்வைப் பொருத்த வரை இந்த பாசம் என்பது மிகவும் அவசியமானதாகும். உயிரினங்கள் அனைத்தும் ஈன்றெடுத்த சிசுக்கள் மேல் பாசம் வைக்கத்தான் செய்கின்ற. அந்த பாசம் என்கிற உணர்வினால்தான் ஈன்றெடுத்து, சிசுக்களை என்றும் பராமரித்து வருகின்றன. அதிலும் தாய்ப் பாசம் என்பது கடவுளின் கருணைக்கு நிகராகப் போற்றத் தக்கதாகும்.
இயற்கையின் எந்தப் பகுதியை ஆராய்ந்து பார்த்தாலும் உயிர்கள் பாச பந்தங்களினால் பற்றுதலுக்கு ஆட்பட்டு ஓயாது வினையாற்றி வருவது தெரியும். உயிர்கள் இடத்து இந்தப் பற்றுதல் எங்கிருந்து வந்தது என்று பார்தால், அது பரம்பொருளிடத்திருந்து வந்ததே என்பது விளங்கும். பரமனும் ஜீவன்கள் மேல் அளவற்ற பற்றும், கருணையும் வைத்திருக்கிறார். இதை கணபதி தாசர் சித்தர் தன் நெஞ்சறி விளக்கத்தில் குறிப்பிடும் பொழுது,
''இலகிய ஊசிக் காந்தம் இரும்பினை இழுப்பதேபோல்
உலவிய குருபர ரன்றாள் உனைனையாட் கொண்ட தன்மை''
என்கிறார். எனவே, இப்பற்றுதலை ரசிப்பது கூட ஒரு வகையில் ஞான விசாரமேயாகும். இப்படிப் பற்றுதலாக வடிவெடுத்து விளையாடுவது பரமனே என்கிற தெளிவு சிந்தையில் ஏற்படுமளவுக்கு, பாச பந்தங்கள் சிறிது சிறிதாக விலகுகிறது.
அதுவே முற்றிலும் விலகி விடும் பொழுது முக்தியாகி விடுகின்றது. உதாரணமாக ஒரு மரத்தை கவனித்துப் பாருங்கள், அதில் உள்ள பிஞ்சானது காம்பை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பிஞ்சை காம்பிலிருந்து பிரித்தால் பிஞ்சிலும் பால் வருகிறது, காம்பிலும் பால் வடிகிறது. இரண்டுமே அழுகின்றன. ஆனால், அதே பிஞ்சானது காம்பிலேயே நிலைத்திருந்து பழுத்து நிற்கும் பொழுது என்றேனும் ஒரு நாள் தானாகவே விலகி விடுகின்றது. இதுதான் முக்தி. இதே விதத்தில்தான் பிரபஞ்ச வாழ்வைப் பற்றுதலோடு உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிற ஜீவனும் முற்றிலும் பரிபக்குவமடையும் பொழுது சிரமமேதுமின்றி எளிதாக முக்தி நிலையை அடைந்து விடுகின்றது.
அதாவது மனிதன் தனக்கும், பிரபஞ்சத்திலுள்ள மற்ற அனைத்து பொருட்களுக்கும், தனித்தனி மதிப்பும், நிலை இருப்பும் இருப்பதாகக் கருதி பிறவியை நீட்டிக் கொண்டே போகிறான். என்றேனும் ஒரு நாள் தானோ, இந்த பிரபஞ்சமோ கடவுளுக்கு அன்னியமானவைகள் அல்ல என்பதை உள்ளது உள்ளபடி உணரும் பொழுது முக்தியை அடைந்து விடுகின்றான். முக்தி என்பது நம் சுய இயல்புதானே தவிர வேறு ஒன்றுமில்லை. பழக்க வழக்கங்களினால் நாம் பல விதமான போலியான இயல்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். போலி இயல்புகளைக் களைந்து விட்டால் உண்மை(முக்தி) மட்டுமே எஞ்சி நிற்கும். அதுவே முக்தி.
கேள்வி - மனம் என்பது மாபெரும் சக்தி என்றால் மனிதன் ஏன் பலவீனமடைகிறான் ?
இராம் மனோகர் - அந்த மனமே பலவீனமடைந்து போவதால்தான் மனிதன் பலவீனமடைகிறான். மனம் என்றால் எண்ணம்தான். எண்ணம் என்றால் சலிப்பும், சலனமும்தான். எண்ணங்கள் குறையும் அளவு மனம் அமைதியடைந்து, பலமுள்ளதாக, மாபெரும் சக்தியாக ஆகி விடுகிறது. எண்ணங்கள் மனிதனைத் தளைக்கின்றன. எந்தவித தளைகளுமற்ற சுதந்திரமான நிலையில்தான் மனம் பலமுள்ளதாகத் திகழ்கிறது.
கேள்வி - எண்ணமில்லாமல் செயல்கள் எவ்வாறு நிகழும் ? வாழ்வதற்கு எண்ணமும், செயலும் அவசியமல்லவா ?
இராம் மனோகர் - எண்ணமே இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எண்ணங்களைக் குறைத்துக் கொண்டு மனதை பலப்படுத்த வேண்டும் என்றுதான் சொல்லப்படுகிறது. உயர்ந்த எண்ணங்களும், நோக்கமும் உள்ளவிடத்து எண்ணங்கள் மட்டுப்படுகின்றன. மனம் தூய்மையுடன் விளங்குகிறது. எண்ணங்களை எல்லாம் மாசுபடுத்துவது ''நான்'' என்கிற ஆணவம்தான். நான் என்கிற எண்ணம்தான் மற்ற அனைத்து எண்ணங்களையும் தன் வசப்படுத்தி, மனதில் ஆசை, கோபம், பொறாமை, வஞ்சம் போன்ற தீய உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் விளைவு சலனம், சலிப்பு, மன அமைதியின்மையாகும்.
ஒரு ஞானியிடம் போய் ஒருவர் கேட்டார் ''நான் சுகமாக வாழ என்ன செய்ய வேண்டும்'' ? என்று.
அந்த ஞானி சொன்னார்
''நீ வாழ வேண்டுமா ? எனில் ''நான்" இப்பொழுதே சாக வேண்டும்'' என்றார். அந்த மனிதர் மிரண்டு போனார்.
ஆனால், இங்கே அவர் குறிப்பிடுவது நான் என்ற எண்ணம் செத்துப் போனால் நீ சுகமாக வாழலாம் என்பதையே. ஒரு விளக்கு இருக்கிறது. அதன் எண்ணெயும், திரியும்தான் நான் என்கிற அகந்தை. விளக்கு எரிய எரிய எண்ணெயும், திரியும் அழிந்து போவதுதான் அகந்தையின் அழிவு. அந்த அழிவின் பயனாக கிடைப்பது ஒளி பொருந்திய சுகமான வாழ்வு. நான் என்கிற அகந்தை அழியும் பொழுதுதான் வாழ்க்கை பயனுள்ளதாக ஆகிறது. நான் என்கிற அகந்தை அழியுமிடத்து எண்ணங்கள் குறைகின்றன. மனம் பலமுள்ளதாக விளங்குகிறது.
கேள்வி - ஐயா, அரும்பாடுபட்டு பெற்று, வளர்த்த தாய் தந்தையர் மற்றும் நம்பி இருக்கும் மனைவி, குழந்தைகளை மறந்து துறவறம் போவது சரியா ? அது பாவமில்லையா ?
இராம் மனோகர் - உலகாய வாழ்க்கை முறையில் தாய் தந்தையர்க்கு கட்டுப்பட்டு நடப்பதுதான் புதல்வரின் தலையாய கடமையாகும். இதை எந்த சாஸ்திரமும் மறுக்கவில்லை. மேஜர் ஆகி விட்டால் அவரவர் இச்சைப்படி வாழ்ந்து கொள்ளலாம் என்று இன்றைய சட்டம் சொல்கிறது. ஆனால் சட்டம் தாய் தந்தையர் பேச்சை கேட்க வேண்டியதில்லை என்று சொல்லவில்லை. தாய் தந்தையரை பராமரிப்பது பிள்ளைகளின் கடமை என்றே சொல்கிறது. அது போலவே தர்ம நீதிப்படி தாய் தந்தையரை புறக்கணிப்பதோ, அவமரியாதை செய்வதோ, நிர்கதியாய் விட்டு விடுவதோ மிகப் பெரிய பாவம் என்றே சொல்லப்பட்டுள்ளது. பெற்றோர்கள் உள்ள மட்டும் அவர்கள் சொற்படி கேட்டு நடக்க பிள்ளைகள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதே நெறியாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் என்ன நடக்கிறது ? எத்தனையோ பேர் பெற்றோரை மீறி, வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நேரில் நடந்தாலோ, சினிமாவில் பார்த்தாலோ நாம் காதலர்களுக்குதான் ஆதரவு தெரிவிக்கிறோம். அப்படியானால் இது கூட பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோரை நிர்கதியாய் விட்டு விட்டு ஓடிப் போகும் பாவச் செயல்தானே ? அதற்கு மட்டும் ஏன் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் ? அது மட்டுமா திருமணம் முடிந்த கையோடு பெற்றோரை தனியே விட்டு விட்டு தனிக் குடித்தனம் போகிறவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அது பாவமில்லையா ?
அதை விடக் கொடிமையான செயல் என்ன தெரியுமா ? பெற்றோர் சேமித்து வைத்திருக்கும் பணம், சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் எனக்கு உனக்கு என்று சண்டை போட்டு பிரித்து எடுத்துக் கொண்டு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இல்லை என்றால் உன் வீட்டில் மூன்று மாதம் என் வீட்டில் மூன்று மாதம் என்று அங்குமிங்கும் அலைக் கழிக்கிறார்கள். இதுதான் நன்றி கெட்டதனம். இதுதான் பாவம். ஆனால், ஆன்மீக விஷயத்தில் இதற்கு விதி விலக்கு உண்டு. இறைவனா ? பெற்றோரா ? என்று கேட்டால், இறைவனுக்குதான் அங்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. துறவறம் என்று வருகின்ற பொழுது, அருள்தாகம் கொண்டு கடவுளை நாடிச் செல்ல விரும்புகிறவன் பெற்றோர், சகோதரர், மனைவி, குழந்தைகள் யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பல உதாரண புருஷர்கள் சுட்டிக் காட்ட முடியும். பட்டினத்தார் துறவறம் செல்ல விரும்பிய பொழுது அவர் தாயார் தடுத்தார். எனக்கு ஈமக் கிரியைகளை யார் செய்வது என்று கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். நான் உனக்கு அந்தக் கடமைகளை செய்வேன் என்று வாக்கு கொடுத்து விட்டு, பிறகுதான் துறவறம் மேற் கொண்டார் பட்டினத்தார். அது போலவே ஆதி சங்கரர்க்கும் நேர்ந்தது.
இராகவேந்திர சுவாமிகள் தன் மனைவி, குழந்தையை விட்டு விட்டுதான் துறவறம் மேற் கொண்டார். பரதன் தன் தாய் சொல்லை மீறிதான் இராமனைத் தேடி காட்டுக்குள் போனான். விபீஷணன் தன் அண்ணனை விட்டு விலகிப் போய்தான் இராமனோடு சேர்ந்தான். பிரஹ்லாதன் கடைசி வரையிலும் தன் தந்தை சொல்லை கேட்கவே இல்லை. பரமார்த்திகப் பெரு வாழ்வு வாழ விரும்புகிறவர்களுக்கு உறவுகள் பெருந்தடையாகவே கருதப்படுகிறது. எனவே அவர்கள் முதலில் உறவுகளை விட்டு விலக வேண்டும் என்பதே கோட்பாடாக அமைகிறது. அப்படிப்பட்ட பரமார்த்திகப் பெரு வாழ்வின் மேன்மையைப் பற்றி விளக்கிக் கூறுவது ஒரு குருவின் கடமையாகும். அவர் இல்லறவாசிகளின் தர்மத்தையும் விளக்குவார், துறவறத்தின் சிறப்பையும் விளக்குவார். அவரவர்கள் தமக்குகந்த வழிகளைப் பின்பற்ற உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள்.
கேள்வி - இந்த விஞ்ஞான யுகத்திலும் பழைய இதிகாசங்கள், புரணங்கள், வேத வேதாந்தங்கள் இவையெல்லாம் தேவைதானா ? இவையெல்லாமே விரசங்களையும், சரச சல்லாபங்களையும்தானே போதிக்கின்றன ?
இராம் மனோகர் - சல்லாபமும், சந்தோஷங்களும் வாழ்க்கையின் ஒரு பகுதிதானே !? வலைத் தளங்களில் எதைக் குறித்துத் தேடப் புகுந்தாலும் விரசத்தைத் தூண்டக் கூடிய விளம்பரங்களும், படங்களும், முகவரிகளும் வரத்தானே செய்கின்றன. நீங்கள் என்னவோ விஞ்ஞான யுகம் என்பது ஏதோ வெறும் சன்யாசி யுகம் என்பது போலப் பேசுகிறீர்கள் !? தேவைப்பட்டால் கேமரா முன் அமர்ந்து கொண்டு நேருக்கு நேரராக நிர்வாணமான பெண்ணிடம் நீங்கள் பேச முடியும். விரசம் என்பது முன்னால்தான் இருந்தது போலவும், இப்பொழுது இல்லாதது போலவும் கேட்கிறீர்கள் !! விரசம் என்று நீங்கள் குறிப்பிடுகிற அந்த விஷயத்தை ஆண், பெண், மூன்றாம் பாலினம் மட்டுமல்ல இன்ன பிற உயிரனங்களும் கூடத் தவிர்க்க முடியாது. எனவே அந்த உணர்வை நெறிப்படுத்த வேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்கிற நிலையில் இதிகாச, புராணங்கள் அந்த வேலையைச் செய்கின்றன.
வேதம் பெண்ணுடன் இணைவதைக் குறித்துப் பேசுவதில்லை. இறைவனுடன் இணைவதைக் குறித்துதான் பேசுகின்றது. விஞ்ஞானத்திற்கு அஸ்திவாரமே வேதாந்தம்தான். வேதாந்திதான் விஞ்ஞானியானான். வேதாந்தம்தான் விஞ்ஞானமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், இந்த விஞ்ஞானத்தை புரிந்து கொள்கிற அளவு நாம் வேதாந்தத்தை புரிந்து கொள்ள முடியாது. அது ஆகாயத்தைப் போல பரந்து விரிந்தது. மனிதன் நேரடியாக விஞ்ஞானியாகத் தோன்றி விடவில்லை. கற்காலம் தொட்டு தற்காலம் வரை பல தரப்பட்ட படித்தரங்களைக் கடந்துதான் இன்றைய நிலையை எட்டியுள்ளான். அதிலும் வேதாந்த காலம்தான் மனிதனின் வளர்ச்சி நிலைகளில் முக்கியமான கால கட்டமாக இருந்திருக்கிறது.
அது வரை தன்னைப் பாதுகாத்துக் கொண்டு நிறைவாக வாழ்வதற்கு மட்டுமே மனிதன் முயற்சி செய்து கொண்டிருந்தான் அதற்குப் பிறகுதான் தனக்கு ஆதாரமான சக்தியைப் பற்றி மனிதன் யோசித்து, அதைத் தேடத் துவங்கினான். வேதாந்த காலம்தான் மனிதனின் அறிவு வளர்ச்சியில் முக்கிமான கால கட்டமாக விளங்குவதோடு, அதில் பெரும் பங்கும் வகிக்கிறது. அத்தகைய வேதாந்தத் தத்துவங்களை அறிந்துணர்ந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அவற்றை ஒருவன் நேராக அறிந்து கொள்ள சூழல் அமைய வேண்டுமென்றால் அவன் அதற்குப் பல பிறவிகளில் அதற்காகப் பண்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பண்பாடு அடைந்தவர்களுக்கே அப்பேராற்றல் வாய்க்கிறது. அவர்கள்தான் யோசிக்கிறார்கள்.
சாமான்யரும் அவற்றை அறிந்து கொள்ளும் விதமாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்கிறார்கள். அதற்காக அரும்பாடு படுகிறார்கள். அதன் விளைவுகளே உபநிடதங்கள், தர்சனங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம். இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் ராமர் பரமாத்மா தத்துவம். சீதை ஜீவாத்மா தத்துவம். இராவணன் ரஜோகுணம் நிறைந்த மனோ தத்துவம். ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகியவற்றைப் பத்து தலைகளாகக் கொண்டது மனது. இந்த மனம் எண்ணும் அரக்கன் ஜீவாத்மனை கவர்ந்து தனதாக்கிக் கொள்ள முயல்கிறான். ஜீவாத்மனோ பரமாத்மாவிடம் போய்ச் சேர வேண்டும் என்று அழுகிறது.
இங்கே ஆஞ்ஜநேயன் என்ற குரு தத்துவம் வருகிறது. ஆஞ்ஜநேயன் எனும் குரு தத்துவம் நான் ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு சேர்த்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறுகிறது. அதன் பிறகு இராமன் என்னும் ஈசனின் அருளுக்கும், இராவணன் என்னும் மனதின் மருளுக்கும் போராட்டம் நடக்கிறது. முடிவில் இராவண சம்ஹாரம் எனும் மனோநாசம் நிகழ்கிறது. ஜீவாத்மன் பரமாத்மாவோடு சேர்கிறது. ஆத்ம சாதகர்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இவ்வாறு இராமாயணம் நடந்தேறுகிறது. மற்ற பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் வாழ்வின் வெவ்வேறு கூறுபாடுகளை விளக்குகின்றன. மனிதனுடைய பிரபஞ்ச வாழ்வே ஒரு போராட்ட களம்தான். மனிதனுடைய உடல்தான் குருக்ஷேத்ர பூமி.
நல்லியல்புகள் பாண்டவர்கள். கெட்ட இயல்புகள் கௌரவர்கள். இரண்டு இயல்புகளுமே மனிதனிடத்திலே இருந்துதான் தோன்றுகின்றன. எனவே அவைகள் தாயாதிகள். பகவான் எல்லோருடைய உள்ளத்திலும் சாரதியாக வீற்றிருக்கிறார். அவர் ஆயுதம் எடுத்து போர் புரிவதில்லை. ஆனால், அவருடைய அருள் நல்ல இயல்புகளுக்கே உரியதாக இருக்கிறது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் முடிவில் தர்மம் வெல்கிறது. இதன் சூக்குமம் என்ன வென்றால் மனிதன் தர்மவானாக இருந்து கர்மங்களை சரிவரச் செய்து அதர்மத்தை வென்று பிறகு பரமனை அடைய வேண்டும்.
வாழ்க்கையின் சூக்குமமான, சிக்கலான பிரச்சனைகள் எல்லாம் இந்த இரண்டு இதிகாசங்கள் மூலம் விளக்கம் பெறுகின்றன. புராணங்களும் அவ்வாறே. பரமார்த்திகத் தத்துவங்களை மக்களின் பொது உடமை ஆக்குவதே புராணங்களின் நோக்கம். பாற்கடல்,தேன்கடல், அமிர்தக்கடல் போன்றவைகள் எல்லாம் உண்மையில் கிடையாது. அவைகள் வாயிலாக வாழ்க்கை எல்லையற்றது, இன்பமயமானது என்று கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு புராணங்களின் உள்ளும் பல்வேறு ஞான தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. தேடினால் கிடைக்கும். மூழ்கினால் முத்தெடுக்கலாம். அதற்கு மூச்சை அடக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment