தன்னிலை விளக்கம்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் என்ற நாலும் பொருள் நிலையில் ஒன்றே. விரிந்த மலர்ச்சியில் இயங்கும் நிலையில், உணரும் ஆற்றலில் பல பிரிவுகளாகி விட்டது. மெய்ப்பொருள், ஆகாசம் என்ற நிலையில் ஆற்றலாகி அதன் திணிவு நிலைகளின் வேறுபாடுகளால் பஞ்ச பூதங்களாகத் திகழ்கின்றது. உயிர்களிடத்து பஞ்ச பூதங்களைப் பிரித்துணர விளைந்துள்ள கருவிகளே பஞ்சேந்திரியங்கள்.
பஞ்சேந்திரியங்கள் மூலமாக எழுச்சி பெற்று ஐயுணர்வுகளாக விளங்குகின்ற விதமே பஞ்சதன் மாத்திரை. மெய்ப்பொருள் பஞ்சதன் மாத்திரைகளாக இயங்கும்போது பெறும் அனுபவமே, அடையும் தன்மையே மனம். மெய்ப்பொருள் தான் மனமாக இயங்குகின்றது. பரநிலைக்கும், மன நிலைக்கும் இடையே பஞ்ச பூதம், பஞ்சேந்திரியம், பஞ்சதன் மாத்திரை இந்நிலைகள் தொடரியக்கக் களமாக விளங்குகின்றன. இவ்வைந்து நிலைகளையும் இணைத்துத் தனது மூலம், சிறப்பு, முழுமை எனும் நிலைகளை உணர்வதே தன்நிலை விளக்கமாகும். இதனால் ஆணவமெனும் திரை விலகி அருட்பேறு அகக் காட்சியாகும். அமைதியும், நிறைவும் அறிவுக்கு உண்டாகும்.
இதன் விளைவாக இனி ஒழுங்குற்ற முறையில் நினைக்கவும், செயல்புரியவும் தனது திறம் ஓங்கும். பாவப்பதிவுகள் ஏற்படா. உள்ள பதிவுகள் கழியும். மயக்கத்தால் ஏற்பட்ட பொருள் பற்று விலகித் தன்னிறைவு உண்டாகும். இப்பெரும் பேற்றினைப் பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கம். ஒரு நல்வாய்ப்பு உங்களுக்கு இப்பேற்றினைப் பெறுவதற்குக் கிட்டி விட்டது. குண்டலினி யோகம் இவ்வனைத்து நலன்களையும் தரவல்லது. நீங்கள் அனுபவத்தாலும், ஆராய்ச்சியாலும் உணர்ந்து வருகின்றீர்கள். குண்டலினி யோகத்தின் மூலம் மனதை அதன் அடித்தளமாகிய உயிரிலும் அதன் தொடக்க நிலையாகிய மெய்ப்பொருளிலும் நிலைக்கச் செய்ய முடிகிறது. இந்த முறையான பயிற்சி நிச்சயம் முழுப்பயனளிக்கும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
*உடல் நலம் பேணும் வழிமுறைகள் உங்களுக்காக அருட்தந்தை அருளியது!*
1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.
அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.
அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது.
அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும்.
உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.
2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை.
இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.
3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.
4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன.
இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.
விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது.
எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.
5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும்.
நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.
6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.
7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.
பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும்.
தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.
8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.
9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த் நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.
10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது.
தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன.
அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.
*இயற்கைக்கும் அறிவிற்கும் உள்ள உறவு*
*ஒடுங்கியும், விரிந்தும், பொருளாகவும், கருத்தாகவும், நன்மையாகவும், தீமையாகவும், இன்பமாகவும், துன்பமாகவும் இயங்கும் அறிவை உடைய மனிதன் எந்த அளவுக்கு, எவ்வளவு ஆழ்ந்து இயற்கையை, அதன் உண்மைகளை, இரகசியங்களை உணர்ந்து கொள்ளுகின்றானோ அந்த அளவிற்கே அவன் வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் பெறுகிறான். இயற்கையை, அதன் விரிவான இயக்க ஆற்றல்களை, மனிதன் அறியாமலோ அல்லது அறிந்தும் மறந்தோ புலனளவில் குறுகி இயங்கும் போது அறிவு, காலம், தூரம், வேகம், பருமன் என்ற பரிமாணங்களால் கருத்தாகவும், வடிவாகவும் மாற்றம் பெற்று உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றது. இந்த நிலையில் அறிவுக்குத் தன்முனைப்பு (Ego) எனும் சிறுமை நிலை உண்டாகின்றது. இந்த சிறுமை நிலையில் மயக்கம், உணர்ச்சி, பயம், மிரட்சி, விளைவறியா செயல்கள், சிக்கல், கவலை இவை தோன்றிப் பெருகி துன்பமடைகின்றது. இயற்கையோடு விரிந்தும் ஆழ்ந்தும், அதன் பெருமையோடு ஒன்றும் போது விளக்கம், விழிப்பு, அன்பு, கருணை, நிறைவு அமைதி, மகிழ்ச்சி இவை பெற்று அமைதி பெறுகிறது. இங்கு தன்முனைப்பு என்ற திரை விலகி இயற்கை என்ற அருட்பேராற்றளோடு இணைந்து மனிதன் பேரின்பமடைகிறான்.*
*எனவே இயற்கையோடு ஒன்றி, உணர்ந்து, தெளிந்து விழிப்புடன் வாழ்வதே ஆறாவது அறிவைப் பெற்ற மனிதனின் பிறவி நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு ஒப்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வே தெய்வ வழிபாடாக உருவாகியது.*
*வாழ்க வளமுடன்*
📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*
📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘📘
No comments:
Post a Comment