மகிழ்ச்சி
***************
வாழ கற்றவர்களுக்கு எல்லா நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாய் மாறுகிறது. நல்ல எண்ணம்: நல்நோக்கு
நம்மிடம் வரும்போது எதிர்மறையான சிந்தனைகள் வராது. அன்பு, பாசம், அமைதி, நம்பிக்கை, மனநிறைவு என்கிற சொற்களால் நம் வாழ்வு நிரப்பப்படும்போது, மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல் ஓடி வந்து நம்மிடம் நிற்கும். நாம் செய்யும் வேலையை நேசித்து, யோசித்து செய்தால், மகிழ்ச்சி தானாய் வந்து நிற்கும். உள்ள வளமும் உடல் வளமும் உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது.
அடுத்தவர் மகிழும் செயல்களை செய்தால் நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. நடக்கும் எல்லாவற்றையும் தடுக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. அதனதன் இயல்போடு எல்லாம் நடக்கிறது என்று உணர தொடங்கினால் குழப்பமும் துக்கமும் மிச்சமாகிறது. கவலை ஒரு மாய வலை நம் இன்பத்தை கெடுப்பதே அது கேட்கும் விலை. தேன் பாட்டிலுக்குள் விழுந்த எறும்பு,பாட்டில் தேனையும் பருகி பருத்து விடலாம் என்று எண்ணத் தொடங்கி இறுதியில் தேனுக்குள்ளே சாவை தழுவி சமாதியாவது நிஜம்.பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா? கரன்சிக் கட்டுகளால் கண்ணீரைத் துடைக்க முடிந்தால் உலகில் ஏன் இத்தனை பேர் சோக ராகம் பாடி கொண்டிருக்கிறார்கள்? கவலையைவிடுங்கள், எல்லாவற்றையும் ரசியுங்கள், பசி நீக்கும் அளவே புசியுங்கள், நல்லஎண்ணமுடையவர்களோடு வசியுங்கள்.
மனம் விட்டு சிரியுங்கள்: வாய் விட்டுச் சிரிப்பவர்களுக்கு நோய் விட்டுப்போகிறது. உம்மென்று இருப்பவர்களை உலகம் விரும்புவதில்லை. சிரித்துகொண்டே இருப்பவர்கள், அனைவருக்கும்
சீக்கிரமே நண்பர்களாகி விடுகிறார்கள். சிரிக்கிறவர்களுக்கெல்லாம் கவலைகள் இல்லை என்பது பொருளில்லை. இடுக்கண் வரும் போது வள்ளுவர் சிரிக்க சொன்னார். பாம்பு கடித்து விஷமேறி
இறந்தவர்களை விட, பாம்பின் விஷம் நம்மை இந்த வினாடியே கொன்றுவிடும் என்று அஞ்சியவர்களே அதிகம் இறந்துபோகிறார்கள். காசில்லாமல் வாழ்க்கை இல்லை; ஆனால் காசு மட்டுமே வாழ்க்கை இல்லை.காயங்களை ஆற்றும் களிம்பு நம் உதடுசிந்தும் புன்னகையே என்று புரிந்து கொள்ளுங்கள். நீலவானில் நீந்தி சிறகடிக்கும்சிட்டுக் குருவிகள் போல் நம் மன வானிலும் நம்மாலும் சிறகடித்து பறக்கமுடியும்என நம்புங்கள்.மலர்ந்த முகம் ஒற்றைப்புன்னகை தேடிவரும் துயரங்களை துார ஓட்டி விடும்.சிரித்த முகம் ஸ்ரீதேவி இருக்கும் இடம், மலர்ந்த முகம் வெற்றியின் அகம். முகமலர்ச்சி, மனமுதிர்ச்சி, நற்பயிற்சி இவையே வெற்றியின் சூத்திரங்கள். சவால் வரும் போதுதான் அதிலிருந்து மீள்கிற வழிகளை நம் மனம் தேடுகிறது. தோல்வி நம்மை துரத்தும்போது தான் வெற்றிக்கு வெகுஅருகில் நாம் வந்து நிற்கிறோம். நாம் சிரிக்க , சிரிக்க நம் வாழ்வின் நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன. மலர்ந்த முகத்தோடு நாம் பழைய சோறு பரிமாறினால் கூட அது அமுதமாக சுவை தருகிறது.
ஐ.வீ.குமரேசன்.
No comments:
Post a Comment