கேள்வி - குண்டலினி விழிப்படைய எவ்வளவு காலம் பிடிக்கும் ?
இராம் மனோகர் - நீங்கள் தூங்கினால் அது விழிக்கும் ஐயா.
கேள்வி - ஐயா என்ன சொல்கிறீர்கள் ? புரியவில்லை ! நான் கேட்பது குண்டலினி யோகம் சித்திக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்று.
இராம் மனோகர் - நான் மட்டும் என்ன சொன்னேன் !!? நானும் அதைத்தான் சொல்கிறேன். மனம் என்கிற கருவி ஒடுங்கி நிற்குமிடத்து குண்டலினி விழிக்கும். அது கண்ணிமைக்கும் நேரமாக இருந்தாலும் சரி, பல மணித்துளிகளாக இருந்தாலும் சரி, அது நிகழும். எனவேதான் மனம் உறங்கும் பொழுது குண்டலினி விழிக்கும். மனம் விழிக்கும் பொழுது குண்டலினி உறங்கும் என்பார்கள். இதை நாம் நம் அன்றாட வாழ்வில் ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது குண்டலினி உறங்குகிறது. அதாவது செயல்படுவதில்லை. எனவே நம் சக்திகள் அனைத்தும் விரையாமாகி விடுகின்றன. பிறகு நாம் ஆழ்ந்து உறங்கும் நிலையில் குண்டலினி விழித்துக் கொள்கிறது. இதனால் நம் உடலெங்கும் நாடி, நரம்புகளுக்குள் சக்தி ஓட்டம் நடைபெறுகிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது, இறந்த செல்களனைத்தும் உயிர்ப்படைகின்றன. நாடி நரம்புகளில் தடைகள் இருக்குமாயின், ஆழ்ந்த உறக்கத்திலும் அந்த இடங்களுக்கு சக்தி ஓட்டம் கிடைப்பதில்லை. இது முதுமை எனப்படுகிறது. எவரொருவர் நாடிகளை சுத்தி செய்து தடைகளின்றி வைத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் நீண்ட நாட்கள் இளமையோடு திகழ்வார்கள்.
இது அன்றாடம் நம் உடலுக்குள் ஏற்படும் நிகழ்வு. இனி மற்றொரு அதிசயமும் உண்டு. அது என்னவென்றால், மனிதன் மூச்சு விடும் பொழுது மனம் வேலை செய்கிறது. மூச்சு நின்றவிடத்து மனமும் நின்று விடுகிறது. மூச்சு நிற்பது என்றால், நாம் வலிய நிறுத்தி வைக்கும் கும்பகம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், அதுவல்ல. அதை விட உயர்வான கும்பகம் ஒன்று ஒவ்வொரு மூச்சிற்கிடையிலும் நமக்குள் நிகழ்கிறது. அதைத்தான் கேவல கும்பகம் என்பார்கள். அந்த கேவல கும்பகம் நிகழும் பொழுதுதான் மனம் ஒடுங்கும். அதாவது நாம் ஒரு மூச்சை உள்ளே இழுத்த பிறகு அதை வெளியே விடுவோம். இந்த இரண்டு செயல்களுக்கும் இடையே ஏற்படும் இடைவெளிதான் கும்பகம் எனப்படுகிறது. இந்த கும்பகம் உள்ளே நிகழும் பொழுது நமது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பியிருக்கும். அதே சமயம் மூச்சை வெளியே விட்டு விட்ட பிறகு, மீண்டும் இழக்க வேண்டுமல்லவா ? அப்படி இழுப்பதற்கு இடையே ஏற்படும் கால அவகாசத்தில் நிகழ்வதுதான் பஹிர் கும்பகமாகிய கேவல கும்பகம். இது நிகழும் பொழுது மனம் ஒடுங்கும். இப்படி நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 25,000 முறை கேவல கும்பகம் நமக்குள் நிகழ்கிறது.
இந்த க்ஷண நேரத்தில் மனம் ஒடுஙகுவதால் ஓரளவு குண்டலினி சக்தி நமக்கு விழித்திருக்கும் பொழுதும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால், அது போதாது. சரி இனி விஷயத்திற்கு வருவோம். இந்த கேவல கும்பகத்தில் கால அளவை நீட்டிப்பதுதான் குண்டலினி யோகம். அதாவது மனதை நீண்ட நேரம் ஒடுக்க நிலையில் நிறுத்துவது. இதற்கு முதலில் கும்பகத்தை உள் முகமாகப் பழகி வரும் பொழுது, அது வெளியில் பஹிர் முகமாகவும் இயல்பாகவே நிகழ்ந்து வலுப்பெற்று வரும். தியான யோகத்தில் இது நிகழ்வதை யோகி அறிவதில்லை. தியானத்தில் வசப்பட வசப்பட மூச்சும் வசப்பட்டு கேவல கும்பகம் நிகழும் பொழுது யோகி சமாதி நிலையை அடைந்திடுவார். ஆனால், அதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதோடு, மனம் அவ்வளவு எளிதில் வசப்படுவதில்லை. பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறபடியால், அதற்கு மாற்றாக, தந்திர யுக்தியாகக் கண்டறியப்பட்டதே இந்த குண்டலினி வாசி யோகம். இதில் ப்ராணாயாமம், மூலபந்தம், உட்டியான பந்தம், ஜலந்திரபந்தம், கேவல கும்பகம் போன்ற கூறுகள் அடக்கம். இதனால் ப்ராண சக்தி வலுப் பெற்று சூக்கும தேகம் ப்ராகசிப்பதோடு, மனமும் எளிதில் ஒடுக்க நிலையை அடையும்.
இப்படிப் பயிற்சியில் முன்னேறிய சாதகருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் குண்டலினி விழிப்பு பெற்று சுழுமுனையை திறந்து கொண்டு, சீறிப் பாய்ந்து மேலேறும். யோகி தன் நிலையை, தனக்கு குண்டலினி விழிப்பு பெற்றதை உணர்வார். கால அவகாசம் என்பது அவரவர் முயற்சியின் தீவிரத்தைப் பொறுத்தது. இனி மேலேறிய குண்டலினி மறுபடியும் கீழிறங்கி வந்து மூலாதாரத்தில் அமர்ந்து கொள்ளும். இனி யோகி செய்ய வேண்டியதெல்லாம். அப்படிக் கீழிறங்கிய குண்டலினியை ஒவ்வொரு ஆதாரத்திலும் 4140 நாழிகைகள் நிறுத்தி, சுவாதிட்டானம் முதலாகிய ஐந்து ஆதாரங்களிலும் மொத்தம் 20700 நாழிகைளகள் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்த வல்லவர்க்கு, அது யோகத்தில் ஓராண்டு ஆகும். இப்படி பன்னிரண்டு யோக ஆண்டுகளைக் கடந்தவர்கள் பூரண யோகியாவார்கள் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் ஆதி சங்கரர் ஆறு ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சகஸராரத்தை அடைந்தாலே யோகி அமநஸ்க அவத்தையை அடைந்து, நிர்விகல்பம் பெற்றிடுவார் என்று கூறுகிறார். அதாவது பூரணமாக யோகத்தில் சாதனை புரிய பன்னிரண்டு ஆண்டுகள் விடா முயற்சியுடன் சாதனங்களை கை கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் 12 பிராணாயாமம் ஒரு பிரத்தியாகாரம் என்றும், 12 பிரத்தியாகாரம் ஒரு தாரணை என்றும், 12 தாரணை ஒரு தியானம் என்றும், 12 தியானம் ஒரு சமாதி என்றும் சொல்வார்கள். 1 தியானம் என்பது 5 மணி நேரம் 45 நிமிடம் 36 நொடிகள் என்பர். அப்படியானால் மற்றதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். சித்தர் பாடல் ஒன்று இரண்டு மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தாரணை என்றும், 24 மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தியானம் என்றும், 12 நாட்கள் மூச்சை அடக்குவது சமாதி என்றும் சொல்கிறது. இதில் இன்னுமொரு ஐயப்பாடு உண்டு. அது என்னவெனில், மூச்சை அடக்கினால் உயிர் பிரிந்து விடாதா ? என்ற கேள்வி எழுகிறது. மூச்சை அடக்கி விடுவது என்றால் மெதுவாக மூச்சு விடுவதுதான். இதைத்தான் ''அடக்கி வாசி(மூச்சு)'' என்று சொல்வார்கள்.
சாதாரணமாகப் பார்க்கும் பொழுது மூச்சு நடைபெறுவது தெரியாது. பொதுவாக ஒரு நிமிடத்திற்கு அதாவது நாலு நொடிகளுக்கு ஒரு சுவாசம் நடைபெறும் பொழுதுதான் மார்பு விரியும், வயிறு புடைக்கும், உடல் அசைவு கண்ணுக்குப் புலப்படும். அதே ஒரு சுவாசத்தை நாம் ஒரு நிமிட கால அவகாசத்தில் மெதுவாக இழுத்து, மெதுவாக விடுவோமேயானால் அசைவு பார்பவர்கள் கண்களுக்குப் புலப்படாது. மூச்சு நடைபெறவில்லை என்றே கருதுவார்கள். எனவே இப்படிப்பட்ட கடினமான, உயர்ந்த யோக நிலையை அடைய 12 ஆண்டுகள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட வேண்டும் என்பதுதான் கோட்பாடு. குருவருளாலும், ஜென்மாந்திரத் தொடர்பாலும், விடா முயற்சியாலும் சிலருக்கு விரைவாகவும் நிகழ்ந்து விடுவதுண்டு. விபத்து மற்றும் அதிர்ச்சியாலும் கூட குண்டலினி எழும்பிய கதைகள் உண்டு.
No comments:
Post a Comment