அறிவுக்கு ஒரு பிறவி - குருவின் உயிர்ச்சேர்க்கை
எளிய முறை குண்டலினியோகா (Simplified Kundalini Yoga)
குருவின் ஆற்றல் துணை கொண்டு குண்டலினி யோக (Simplified Kundalini Yoga) தீட்சை பெற்ற பின்பு, ஆரம்பகட்ட சாதகனின் மனம் அவனுடைய உயிரை உணர்வாகப் பெற இயலும்.
அவன் எதை உணர்கிறான் ?.. ஓர் ஆற்றல் இருக்கிறது. ஓர் இயக்கம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, அது எது என்றால் அதுதான் அவனுடைய உயிர்.
அவனுடைய ஆன்மாவே அவனை உணர்கிறது. இதுவரையில் உருவமாக புலன்கள் மூலமாக அதை உணர முடியவில்லை. மனதின் நுண்ணிய நிலையில் ஆக்கினையில் (Agna Chakra) ஊரு உணர்ச்சியாகப் பெறுகிறான். உணர்ச்சியாகப் பெற்ற பிறகு, அந்த உணர்ச்சியையே மனதினால் நோக்கும்போது மனம் லயமாகிறது.
அறிவை அடக்க நினைத்தால் அலையும்
அறிவை அறிய நினைத்தால் அடங்கும்.
அறிவு நிலைபெற வேண்டுமானால், அதை அறிய வேண்டும்.
மனம் (Mind) தன்னுடைய பிறப்பிடத்தை நோக்கிச் சென்று, ஆழ்ந்து, ஆழ்ந்து, அதிலேயே லயமாக வேண்டும்.
*இதுவரைக்கும் உருவங்களாக - குணங்களாகவே செயல்பட்ட மனம் உருவமற்ற நிலையிலே குறுகி நுணுகி நிற்க கொஞ்ச நாளாகும். என்றாலும் 'குண்டலினியோக தவம்' (Simplified Kundalini Yoga) தொடங்கிய நாள் தொட்டு மனதிற்கு உறுதி, தெளிவு இவைகளெல்லாம் உண்டாகும்.
உயிர் - மேலே எழுப்பப்பட வேண்டும்.
அதன் இயக்கத்தை, இயக்க மையத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே யோகத்திற்கு (Meditation) முதல் படியாகும்.
அதற்கென நீண்டகாலம் செலவிட தேவையில்லை. நாம் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' (World Community Service Center) மூலமாகக் "குண்டலினியோகத்தை" வெகு எளிமையாக்கி விட்டோம்.
மூச்சுப் பயிற்சி வேண்டியது இல்லை. மந்திர ஜெபம் தேவை இல்லை.
முதலிலேயே அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போதிய அளவு சேமித்து வைத்திருக்கும் ஜீவகாந்த (Bio Magnetic Force) ஆற்றல் துணை கொண்டு மூலாதாரத்தில் இருந்து தட்டி எழுப்பி மேலே கொண்டு வந்து தொட்டு உணர்த்தி நிறுத்தி விடுகிறார்கள்.
இதை ஸ்பரிச தீட்சை என்று சொல்வார்கள்.
பயிற்சியாளர், குருவின் ஆற்றலால் தூண்டப்பட்டு தனது உயிராற்றலை உணர்கிறார் (the life force of the aspirant responses to the life force of the master) அது தான் உண்மை.
அந்த உணர்வையே (Bio Current) மனதால் நினைக்க வேண்டியது தான், அந்த உணர்வை மனதால் நோக்க வேண்டியது தான் (Mentally observe the life force). மனதை உயிர் உணர்வின் மீது செலுத்துகிறோம் Bio Feed Back என்று சொல்வார்கள்.
அறிவில் முழுமை பெற வேண்டும் என்ற எண்ணமும், இறைநிலையை அடைய வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் வர வேண்டுமானால் அதற்கு
உயிரைப் பற்றி அறிந்தவர்களுடைய உயிர் ஆற்றல் பயிற்சியாளரிடம் சேர வேண்டும்.
பாலுக்கு உரை ஊற்றுவது போல, குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போதுதான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது அறிவுக்கு ஒரு பிறவியும் உண்டாகி விடுகிறது.
மனதை உயிராற்றலின் (Life Force) மீது செலுத்தி தவமியற்றும்போது ஜீவகாந்தம் (Bio Magnetism) சேமிக்கப்படுவதால் உடல் நலம் நன்றாக இருக்கும். எத்தனை விதமான மன சம்மந்தமான வியாதிகள் உள்ளனவோ எல்லாம் தானாகவே போய்விடும்.
தினமும் சில நிமிடங்கள் பயிலும் குண்டலினியோகத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் உயிர்ச்சக்தியை முறையாகச் சேமித்து அதன் குறைந்தபட்ச அளவுக்குக் (Minimum Critical Level) கொஞ்சம் கூடுதலாக வைத்துக் கொண்டோமேயானால், உடலும் நன்றாக இருக்கும். மனமும் நன்றாக இருக்கும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!!
தத்துவஞானி வேதாத்திரி மகரிசி